பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பாதுகாப்பாக செயற்படுவதுடன், கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட வேண்டும்! வீ.பிரேமானந்


 (அப்துல்சலாம் யாசீம்)

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பாதுகாப்பாக செயற்படுவதுடன், கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட வேண்டும் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (30)  பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


உலக வங்கியின் நிதி உதவியுடன் சுகாதார அமைச்சின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் 14 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.



கொவிட் 19 முதலாவது அலையின் போது சிறந்த முறையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையாற்றியதாகவும், அவர்களின் சேவையை பாராட்டி உலக வங்கி இவ்வாறான நிதியினை வழங்கியதாகவும், எதிர்காலத்தில் இன்னும் தீவிரமாக தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வாறான செயற்திட்டங்களை சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அத்துடன் நாங்கள் அரசுக்கும், அமைச்சுக்கும், பொதுமக்களுக்கும் நம்பிக்கையாகவும் சிறந்த சேவையாற்றும் மனப்பான்மை மிக்கவர்களாகவும் செயலாற்ற வேண்டும் எனவும் எதிர்காலத்தில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு  திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் 19 தடுக்கும் முகமாக பாரிய சேவையாற்றியவர்களாக நாங்கள் மக்கள் மத்தியில் சிறந்த நற்பெயரை பெற வேண்டும் எனவும் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் இதன்போது தெரிவித்தார்.


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் 14 பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கே இந்த மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.