Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,952 ஆக உயர்வு- 1783 பேர் பலி


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 
52,952 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 651 ஆக உயர்வடைந்து உள்ளது.தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் மேலும் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

 உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,952 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3561 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 89 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.  கொரோனாவால் இதுவரை 1783 பேர் உயிரிழந்த நிலையில், 15,267 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் அதிக அளவாக மராட்டியத்தில் 16,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 34 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 617ல் இருந்து 651 ஆக உயர்ந்து உள்ளது.  3 ஆயிரத்து 94 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர்.

கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது.  இதனை தொடர்ந்து மணிப்பூர் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு உள்ளன.  தமிழகத்தில் 4,829 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  1,516 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர்.  இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.
அடுத்த இடத்தில் 6625 பேருக்கு தொற்று  பாதிப்புடன்  குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 396 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1500 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் வரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த வாரம்  முதல் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 4829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1516 பேர் குணமடைந்துள்ளனர்.


இந்தியாவில் 548 டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி! 

இந்தியாவில் 548 டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரஸ் நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது.

ஏறத்தாழ 50 ஆயிரம் பேரை இந்த வைரஸ் இந்தியாவில் இதுவரை தாக்கி உள்ளது.அவர்களை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரைப்பணயம் வைத்து இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்கள்.

இந்த உயிர் காக்கும் களப்பணியில் அவர்களும் பாதிப்புக்கு ஆளாவது தொடர்கதை ஆகி வருகிறது. இது மருத்துவ பணியாளர்களிடையே மிகுந்த கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் அவர்கள் தங்கள் பணியை தொடர்கின்றனர்.

இதுவரை இந்தியாவில் 548 டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக மத்திய அரசு தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு, யூனியன் பிரதேச பணியில் உள்ளவர்கள் ஆவார்கள். தலைநகர் புதுதில்லியில் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று, 69 டாக்டர்களை பாதித்து இருக்கிறது.

நர்சுகளை, மருத்துவ சார்பு பணியாளர்களை பொறுத்தமட்டில் 274 பேர் இந்த வைரசின் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசு சார்பில் நடத்தப்படுகிற புதுதில்லி சப்தர்ஜிங் ஆஸ்பத்திரியில் 7 உறைவிட மருத்துவர்கள், ஒரு பேராசிரியர் உள்பட 13 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுதில்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஒரு உறைவிட மருத்துவர், 5 நர்சுகள் உள்பட 10 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதே ஆஸ்பத்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிலருக்கும் இந்த வைரஸ் தாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தவிர்த்து புதுதில்லியில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் ஆஸ்பத்திரிகள் பலவற்றிலும் மருத்துவ பணியாளர்கள் பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.என்னதான் பி.பி.இ. என்று சொல்லப்படக்கூடிய சுய பாதுகாப்பு கருவிகள் அணிந்து கொண்டு பணியாற்றினாலும்கூட, அதையும் தாண்டி கொரோனா வைரஸ் மருத்துவ பணியாளர்களையும் தாக்குவது புரியாத புதிராக உள்ளது.

(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது) 

No comments